பெருவெள்ள பாதிப்பால் திபெத்தில் சிக்கிய 148 தமிழர்கள் மீட்கப்பட்டு காத்மாண்டு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், கோவையைச் சேர்ந்த ஏஜென்சி மூலம் சென்ற மேலும் 39 பேர் திபெத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திபெத் - நேபாளத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக ஆன்மீக யாத்திரை சென்றவர்களில், கும்பகோணத்தைச் சேர்ந்த டிராவல் ஏஜென்சி மூலம் சென்ற 57 பேரில் 21 பேர் மீட்கப்பட்டு நேற்று தமிழகம் அழைத்துவரப்பட்டனர். இந்த குழுவில் மீதமுள்ள 36 பேரும், சென்னை ஏஜென்சி மூலம் சென்ற 49 பேரும் எங்குள்ளனர் என இதுவரை அறியமுடியவில்லை. இந்நிலையில், திபெத் சாஹா பகுதியில் சிக்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் சென்ற 148 தமிழர்கள் சீன ராணுவம் மூலம் மீட்கப்பட்டு காத்மாண்டு சென்றடைந்துள்ளனர். இதே போல், கோவை ஏஜென்சி மூலம் சென்ற 39 தமிழர்கள் திபெத் பகுதியில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களை தொடர்புகொண்டுள்ள தமிழக அதிகாரிகள், 31-ந்தேதி தமிழகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.