ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் தினேஷ் (31) இவரது மனைவி சுகுணா (26) இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் தினேஷ் ஆயில் மில் ஒன்றில் ஓட்டுநராக வேலைபார்த்து வந்தார். சுகுணா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பாப்புலரானதால் மேடை நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஆடி வந்தார். சம்பவத்தன்று இஸ்மாயில் மைதீன் வீதியில் சுகுணா மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் அறிந்து சென்ற கணவர் தினேஷ், மனைவி சுகுணாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைகாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சுய நினைவு திரும்பாமலேயே சுகுணா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார் சுகுணாவின் உடலை பிணக்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதில் அவரது குரல்வலை நெரிக்கப்பட்டதால் உண்டான மூச்சு திணறல் காரணமாக சுகுணா உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து விரிவான விசாரணையை முன்னெடுத்தனர். சுகுணா பிளாட்பாரத்தில் உள்ள காலணி விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சென்ற நிலையில் இஸ்மாயில் வீதிக்கு எதற்காக சென்றார் என்று விசாரித்த போது, சுகுணாவுக்கு அதே தெருவில் வசிக்கும் தவுபீக் (28) என்பவருடன் பழக்கம் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் அங்குள்ள அவரது வீடு பூட்டிக் கிடந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்து சுகுணாவின் செல்போனும் மாயமாகி இருந்ததால் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர். இதில் சுகுணாவின் செல்போன் கடைசியாக தவுபீக்கின் வீட்டிற்குள் இருந்தது தெரியவந்தது. அவனது செல்போன் பவானியில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு உள்ள தங்கும் விடுதியில் வைத்து தவுபீக்கை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் கூடா நட்பால் நிகழ்ந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இன்ஸ்டாவில் தன்னுடைய ரீல்ஸுக்கு கமெண்ட் செய்து அறிமுகமான ஆண் நண்பரான தவுபீக் உடன் சுகுணாவுக்கு திருமணம் கடந்த உறவு இருந்துள்ளது. மனைவி இல்லாத நேரத்தில் தவுபீக் , சுகுணாவை தனது வீட்டிற்கே அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், சுகுணாவிடம் இருந்து அடிக்கடி கடனாக பணமும் பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. சம்பவத்தன்று தனது மனைவியை கோவையில் உள்ள தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த தவுபீக், சுகுணாவை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்த பின்னர் தானும் நிரந்தரமாக கோவைக்கு செல்ல இருப்பதாக சுகுணாவிடம் கூறியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுகுணா தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சுகுணாவின் கழுத்தை பிடித்து கைகளால் இறுக்கியதாகவும், அதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகின்றது. முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் சுகுணா எழுந்திருக்காததால் அவர் உயிரிழந்து விட்டதாக கருதி உடலை வீட்டிற்கு வெளியே வீதியில் கொண்டு வந்து போட்டு விட்டு , செல்போனை எடுத்துச்சென்று காலிங்கராயன் வாய்க்காலில் வீசிவிட்டு தப்பியதாக தவுபீக் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கொலையாளியை கைது செய்யக்கோரி சுகுணாவின் கணவர் தினேஷுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தவுபீக் கைது செய்யப்பட்டு விட்டதாக கூறியும் கேட்க மறுத்ததால், வீடியோ கால் மூலம் அவன் போலீசாரிடம் இருப்பதை காண்பித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில், உண்டான கூடா நட்பால் ஒரு உயிர் பறிபோயிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.