பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. 8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கும் முடிவுக்கு தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், 8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கினால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். அமைச்சர் கூறுவது போல் நெசவாளர்களிடம் இதுகுறித்து எந்த கருத்தும் கேட்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இலவச வேட்டி திட்டம் பயனாளிகளுக்காக மட்டுமல்ல, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் திட்டம் என்றும் ஆஸ்டின் தெரிவித்தார். ஏற்கனவே 8 முழ வேட்டிகள் நெய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் யாரும் 4 முழ வேட்டி வேண்டும் என கேட்கவில்லை என்றும் கூறினார். 4 முழ வேட்டிகளை பழைய தறிகளில் நெய்ய முடியாது என்றும், அதற்காக தறிகளின் அளவுகளில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் ஆஸ்டின் சுட்டிக்காட்டினார். தரம் குறைந்த மற்றும் கூலி குறைவான வேட்டிகளை அரசு ஏன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜய் பாலாஜி, மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே அரசின் நோக்கம் என தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியையே விரும்புவதாகவும், வெளுக்கப்படாத 8 முழ வேட்டி வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறினார். நான்கில் மூன்று பங்கு மக்கள் 4 முழ வேட்டியை விரும்புவதாக தெரிவித்த அமைச்சர், இம்முறை பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலையும் வழங்கப்பட உள்ளதாக கூறினார். ஏற்கனவே நெய்யப்பட்டு இருப்பில் உள்ள 8 முழ வேட்டிகளையும் அரசு கொள்முதல் செய்யும் என்றும் உறுதியளித்தார். மேலும், பொங்கலுக்கு கொடுக்கப்படும் தரமான 4 முழ வேட்டியை கட்டிக் கொண்டு தாங்கள் அனைவரும் பேரவைக்கு வரத் தயார், தி.மு.க. ஆட்சியில் கொடுத்த வேட்டிகளை கட்டிக் கொண்டு அக்கட்சியினரால் வர முடியுமா? என அமைச்சர் விஜய் பாலாஜி பதிலடி கொடுத்தார். இதனிடையே, 4 முழ வேட்டிகள் சிறப்பாக இருப்பதாக கிராமப்புற மக்களிடையே கருத்து நிலவுவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
Back to Top News
Top
August 31, 2026 at 9:46 AM
பொங்கலுக்கு 4 முழ வேட்டி தரக்கூடாது - கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து திமுக எதிர்ப்பு
Polimer News