பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் சுமார் 1600 மாணவர்களின் உயிரை காப்பாற்றி, ஹீரோவாக உருவெடுத்துள்ளார். நடந்தது என்ன? நுவாகோட்டின் திரிசூலியில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராகவும், பள்ளியின் தலைமை ஆசிரியருமாகவும் 47 வயதான ராஜேந்திர தவாடி என்பவர் வேலை பார்த்து வந்தார். புதன்கிழமை காலை 9:20 மணிக்கு ராஜேந்திர தவாடியின் நண்பர் ஒருவர், அவருக்கு போன் செய்து, ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டதாகவும், உடனே தப்பித்து ஓடுமாறும் எச்சரித்துள்ளார். உடனே, அவர் பள்ளி மணியை அடித்து, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, மாணவர்களை உடனே அழைத்து செல்லுமாறு செய்துள்ளார். 1,643 குழந்தைகளும் ஒரு போதி மரத்தின் அடியில் பாதுகாப்பாகத் தஞ்சம் புகுந்த சில நிமிடங்களிலேயே, அவர்களின் பள்ளிக் கட்டிடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பள்ளி தலைமையாசிரியரின் சாமர்த்தியம்..! தவாடியின் இந்த செயலால் 1,643 பேரும் உயிர் தப்பினர். ஆனாலும், பள்ளி ஊழியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு ஊழியர்கள் பலியான சோகம்..! சமூக அறிவியல் ஆசிரியர் சந்தோஸ் (32), காலை உணவு சமைப்பதற்காக ஆற்றங்கரையில் உள்ள தனது வாடகை அறைக்குத் திரும்பியபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதே போல பள்ளியின் துப்புரவுப் பணியாளரான சுல்தான் பள்ளியின் கதவுகளை மூடுவதற்காகத் திரும்பியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். "அந்த 10 நிமிடம் மட்டும் தாமதித்திருந்தால்" இதுகுறித்து பேசிய தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடி, வெள்ளம் குறித்த தகவல் வந்ததுமே, இனி தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். ஒருவேளை வெள்ளம் வராவிட்டாலும், ஒரு நாள் வகுப்புகள் மட்டும்தானே பாதிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். மாணவர்களை உயரமான பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, ஆற்றில் இருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் இருந்த பள்ளி விடுதிக் கட்டடம் வெள்ளநீரில் மூழ்குவதை பார்த்ததாகவும், "நாங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக முடிவு எடுத்திருந்தால், மாணவர்கள் உட்பட நாங்கள் யாருமே இன்று உங்களிடம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.