மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்ற பிடிவாதத்தைத் தமிழக அரசு தளர்த்திக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று நவோதயா பள்ளிகளை தடுப்பீர்கள், நாளை மத்திய அரசின் பிற திட்டங்களைத் தடுத்தால் நாட்டின் இயக்கம் என்னாவது? என கேள்வி எழுப்பினர். தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளுக்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவை 3 மாத காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு டிசம்பர் 14-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.