புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. முதலமைச்சர் ரங்கசாமி நின்று வெற்றி பெற்ற தொகுதியான தட்டாஞ்சாவடியில், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மீண்டும் களமிறங்கும் அசோக் ஆனந்த் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோக் ஆனந்த், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் இதனிடையே, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகம் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே நேயம் மக்கள் கழகத்தின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர். பொதுத்தேர்தலின்போது இதே தட்டாஞ்சாவடி தொகுதியில் நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்ட விநாயகம், இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை ஏற்று அக்கட்சியில் இணைந்துள்ள விநாயகம், தற்போது தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார். காங்கிரஸ் வேட்பாளருக்கு தவெக ஆதரவு இந்த நிலையில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்.6ஆம் தேதி நடைபெற உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. தவெக ஆதரவு விநாயகத்துக்கு கிடைத்துள்ள நிலையில், தொகுதியின் தேர்தல் களம் மேலும் பரபரப்படைந்துள்ளது.