சென்னை,கிண்டி ரயில் நிலையத்தில் கடந்த 19 ம் தேதி இருவேறு கல்லூரி மாணவர்கள் கற்கலை கொண்டு வீசுவதும், பட்டா கத்தியால் சுழற்றுவதுமாக மோதல் ஏற்பட்டதை கண்ட ரயில் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். அப்போது,வீசி எரிந்த கல்லால் வேளச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வந்த மாம்பலம் ரயில்வே காவல் துறையினர், காயம்பட்ட மாணவனை,சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமபவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல் துறையினர், நந்தனம் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் இரு பிரிவாக இந்த மோதலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். பச்சையப்பன் கல்லூரியில் பயின்று படிப்பை பாதியிலேயே நிருத்திய பல்லாவரத்தை சேர்ந்த கனகவேல், பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் கீழ்ப்படப்பையைச் சேர்ந்த விஷ்வ குரு, நந்தனம் அரசு கலை கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயிலும் அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இடையே., ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளை பேசியது மட்டுமல்லாமல்., ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டதால் உண்டான முன்விரோதத்துக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து ஒருவரை ஒருவர் கற்களை கொண்டும், பட்டாகத்தியாலும் தாக்கி கொண்டது தெரியவந்தது. மூன்று மாணவர்களிடம் இருந்து இரண்டு பட்டாக்கத்திகள், கருங்கற்கல், உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகளை பறிமுதல் செய்த மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட ஏழு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவு படி 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான மற்ற மாணவர்களை தேடி வருகின்றனர். பொது வெளியில் ரீல்ஸுக்காக கெத்து காட்டுவதாக நினைத்து இது போன்ற அடாவடியில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டால், மாணவர்களின் கல்வி மற்றும் வேலைக்காண வெளிநாட்டு பயணம் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கும் போலீசார் வாழ்க்கையில் அரசு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர். ரீல்ஸ் என்பது தற்காலிக பொழுது போக்கு என்ற ரியாலிட்டியை உணராமல் சமூக வலைதளப் புகழுக்காக மாணவர்கள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் இழக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர் காவல் துறையினர்
Back to Top News
Top
July 22, 2026 at 11:38 AM
ரீல்ஸுக்காக கத்தி எடுத்தாலும் மொத்த வாழ்க்கையும் க்ளோஸ்.. போலீசில் பகீர் எச்சரிக்கை ஏன்?
Polimer News