மாயமான இளைஞன்..! தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். 30 வயதான இவர் டீக்கடை, இறைச்சிக் கடை ஆகிய கடைகளில் கிடைக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். மகேந்திரனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், மனைவியோடு கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதியன்று வீட்டில் இருந்து எக்ஸ்.எல். பைக்கில் புறப்பட்ட மகேந்திரன், வீடு திரும்பவில்லை என மகேந்திரனின் மனைவியும், பெற்றோரும் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்து போலீசார் மகேந்திரனை தேடி வந்துள்ளனர். மகேந்திரன் பயன்படுத்திய எக்ஸ்.எல். பைக், கடையநல்லூர் அருகே நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், மகேந்திரன் இறுதியாக யாரிடம் போனில் பேசினார் என கால் ஹிஸ்டரியை ஆராய்ந்தபோது, மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனிடம் இறுதியாக போனில் பேசியது தெரியவந்தது. கிணற்றுக்குள் உடலை கல்லை கட்டி இறக்கிய சிறுவர்கள்..! போலீசார் உடனே அந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மகேந்திரனின் உடல், மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்த கட்டிடத்திற்கு உள்ளே பாழடைந்த கிணற்றில் இருப்பதாக சிறுவன் கூறியதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்றனர். 25 கி.மீ தொலைவில் தலை..! கிணற்றுக்குள் கல் கட்டி இறக்கப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர். அப்போது உடலில் தலை இல்லாததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தலை எங்கே என போலீசார் சிறுவனிடம் விசாரித்தபோது, கடையநல்லூரில் இருந்து, சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குற்றாலம் காவல் நிலையம் அருகே உள்ள கலைவாணர் அரங்கம் பகுதியில் தலையை புதைத்து விட்டதாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான். பின்னர், அங்கு சென்ற போலீசார் சிறுவன் சொன்ன இடத்தில் தோண்டி தலையை மீட்டனர். 3 சிறுவர்கள் கைது..! இந்த கொடூர சம்பவத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டீர்கள்? என போலீசார் சிறுவனிடம் விசாரித்தபோது, மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மற்றும் 18 வயது நிரம்பிய இளைஞன் ஒருவனும் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான 18 வயது நிரம்பிய இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர். வெறிச்செயலின் பின்னணி..! போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மகேந்திரனும், 17 வயது சிறுவனும் கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். ஊருக்கு இருவரும் வந்த நிலையில், மகேந்திரன் சம்பவத்தன்று சிறுவனுக்கு போன் செய்து, மது அருந்த அழைத்துள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. பின்னர், மகேந்திரன் சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாரு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவன், தனது ஊரை சேர்ந்த நண்பர்கள் மூன்று பேருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிறுவனோடு சேர்ந்து கொண்டு, மகேந்திரனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. தலையை துண்டித்துவிட்டு சடலத்தை கல்லை கட்டி கிணற்றுக்குள் வீசி விட்டு, தலையை 25 கி.மீ தூரம் சென்று புதைத்ததாகவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என்பது குறித்தும் தென்காசி மாவட்ட போலீசார் கைதான 3 சிறுவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.