சென்னைக்கான இரண்டாவது புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக இரண்டு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் ஆகிய இரண்டு இடங்களில் புதிய விமான நிலையம் அமைக்க பரிசீலனை செய்வதாகவும், இரு இடங்களிலும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. செய்யூர் பகுதி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மற்றொரு இடமான கும்மிடிப்பூண்டி மாநெல்லூர் சென்னை நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இரண்டு இடங்களிலும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு செய்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.