கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற வி.சி.க தலைவர் திருமாவளவனை சூழ்ந்துகொண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களில் ஒருவர் அவரது கன்னத்தைக் கிள்ள முயன்ற நிலையில், பவுன்சர் அவரை விரட்டியடித்தார். திருமாவளவனுடன் அருகிலிருந்து புகைப்படம், செல்பி எடுக்கும் ஆர்வத்தில் அவரை நோக்கிக் குவிந்த தொண்டர்களை சமாளித்து, அவரை மேடைக்கு அழைத்துச் செல்ல போலீசாரும் பவுன்சர்களும் படாதபாடு பட்டனர். ஒருவழியாக மேடையேறி மணமக்களுடன் கேக் வெட்டிய திருமாவளவன், அவர்களை வாழ்த்தி பேசச் சென்றபோதும் செல்போன்களுடன் தொண்டர்கள் முண்டியடித்தனர். பேசி முடித்துவிட்டு பெரும் போராட்டத்துக்கு இடையே மேடையைவிட்டு இறங்கிய திருமாவளவனை அன்பு மிகுதியில் தொண்டர்கள் தொடர்ந்து துரத்தியதால் அவர் ஓட்டமும் நடையுமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.