ராணிப்பேட்டை மாவட்டம், தெங்கால் பாலாற்றங்கரை பகுதியில், அரசுக்கு சொந்தமான வேளாண் துறை தென்னம்பண்ணை உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், இரவு, 10:00 மணியளவில், காதலர்களான, 24 வயது வாலிபர், 20 வயது இளம்பெண் அங்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த மூன்று கொடூரன்கள், காதலனை சரமாரியாக தாக்கி மயக்கமடைய செய்துவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய இளம்பெண் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து, அருகே வசிக்கும் ஊர் மக்களிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அங்கு, 50க்கும் மேற்பட்டோர் சென்றபோது, மூன்று பேரும் தப்பி ஓடினர். மயங்கி கிடந்த காதலன், பாதிக்கப்பட்ட பெண் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 08.09.2025 அன்று நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில், A1 பார்த்திபன், A 2 சிவராஜ் மற்றும் A3 ராஜா ஆகியோர் அதேநாளில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வந்த நிலையில், இவ்வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2026 செப்டம்பர் 2 ஆம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்த ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தேன்மொழி, A1 குற்றவாளி பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையுடன் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதரம் விதித்தார். A2 குற்றவாளி சிவராஜ் மற்றும் A3 குற்றவாளி ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததோடு மேலும் தலா 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதுகுறித்து, காவல்துறை தரப்பில், “ கூட்டு பாலியல் கொடூர வழக்கை, நீதிமன்றத்தில் சிறப்பாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் சங்கர், தற்போதைய அரசு வழக்கறிஞர் டில்லி, வழக்கின் புலனாய்வு அதிகாரியான காவல் ஆய்வாளர் ஷாகின் மற்றும் நீதிமன்ற காவலர் ஐஸ்வர்யா ஆகியோரை, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் பாராட்டியதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற குற்றவாளிகள் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இளம் பெண்ணிடம் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு, ஓராண்டிற்குள்ளாக தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது, ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Back to Top News
Top
September 3, 2026 at 7:23 AM
கூட்டு பாலியல் கொடூரன்கள் நினைத்துப் பார்க்க முடியாத தீர்ப்பு.. பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி.. தென்னம்பண்ணையில் பயங்கரம்!
Polimer News