திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மேட்டு கண்டிகை என்ற இடத்தில், காவலாளி இல்லாத தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையத்தில் இருந்து ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்று, 10 லட்ச ரூபாய் திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் கொண்டும், கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், அரண்வாயல் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் ஓரத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. அத்துடன் அதன் அருகே ஆம்னி வேன் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. கொள்ளையில் 6 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், ஏடிஎம் பணத்துடன் மூன்று இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை வைத்து, கொள்ளையர்களைப் பிடிக்க 38 பேர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை மூடும்படி வங்கிகளுக்கு ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் உத்தரவிட்டுள்ளார்.