கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த டூரிஸ்ட் கார் ஓட்டுனர் ஃபிரடெரிக் என்பவர் ஆஸ்திரேலியா சுற்றுலாபயணிகளை கேரளத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு அழைத்து சென்றுள்ளார். கார் ராமேஸ்வரம் ஊருக்குள் ஒரு வழி பாதையில் நுழைந்ததாக கூறி போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அரசு பேருந்து மற்றும் இரு சக்கரவாகனங்களை பின் தொடர்ந்து காரை ஓட்டிச்சென்றதாக கேரள ஓட்டுனர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த காரை விரட்டிச்சென்ற ராமேஸ்வரம் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து நோ எண்ட்ரியில் எதற்காக காரை ஓட்டி வந்தீர்கள்? எனக் கேட்டு ஓட்டுனரை இறங்க கூறினர். அவர் அவ்வளவு பெரிய பேருந்து போகுது, இரு சக்கரவாகனங்கள் போகுது காருக்கு மட்டும் நோ எண்ட்ரியா ? என்று கேள்வி கேட்டதால் போலீசாருடன் வாக்குவாதம் வலுத்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் 3 பேர் சேர்ந்து தங்களிடம் நியாயம் கேட்ட அந்த கேரள ஓட்டுனரை பிடித்து காரில் இருந்து இறக்கி ஆட்டோவில் இழுத்து போட்டு காவல் நிலையம் அழைத்துச்செல்ல முயன்றனர். எந்த தவறும் செய்யவில்லை , காவல் நிலையம் வந்தால் பொய் வழக்கு போடுவீர்கள் என்று கூறி அந்த ஓட்டுனர் வர மறுத்த நிலையில், அவர் குடி போதையில் கலாட்டா செய்வதாகவும், தங்கள் மீது காரை ஏற்ற முயன்றதாகவும், அதிவேகத்தில் காரை ஓட்டிவந்ததாகவும் அடுக்கடுகான குற்றச்சாட்டுகளை கூறினர் போக்குவரத்து போலீசார். ஒரு கட்டத்தில் அந்த ஓட்டுனரை சிலரது துணையுடன் அடித்து இழுத்து கட்டாயப்படுத்தி ஆட்டோவில் இழுத்து போட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். காவல் நிலையம் சென்ற பின்னர் கேரள ஓட்டுனர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்ததாக போக்குவரத்து போலீசாரான பிரதாப் சிங், ரவி வர்மா ஆகியோர் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் காருக்குள் இருந்து எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கேரள கார் ஓட்டுனர் பிரடெரிக் , அரசு பேருந்து சென்ற சாலையில் தான் சென்றதாகவும், அது நோ எண்ட்ரி என்று தமிழ்நாடு போலீசார் தன்னை தாக்கி அராஜகமாக நடந்து கொண்டதாக முதல் அமைச்சருக்கு புகார் தெரிவித்துள்ளார். போலீசார் கூறியபடி டூரிஸ்ட் கார் ஒரு வழிப்பதையில் சென்றால் சம்பந்தப்பட்ட காரின் நம்பரை குறித்து அபராதம் விதித்திருக்கலாம், அதை விடுத்து அந்த காரை விரட்டிச்சென்று , அந்த ஓட்டுனரை ஏதோ சர்வதேச தீவிரவாத மாதிரி போலீசார் அடித்து இழுத்துச்செல்லலாமா ? இது எந்த வகையிலான மனித நேயம் ? என்றும், மது அருந்தி இருந்தார் என்றால் பிரீத் அனலைசர் வைத்து ஏன் சோதனை செய்யப்படவில்லை ? என்றும் கேள்வி எழுப்பி உள்ள கேரள நெட்டிசன்கள், அவரது வீடியோவை தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு டேக் செய்து வருகின்றனர். இதற்கிடையே கேரள ஓட்டுனர் பிரடெரிக் வெளியிட்ட தமிழக போக்குவரத்து போலீஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டான நிலையில், ராமேஸ்வரம் போலீசார் ஒரு நாள் கழித்து அவர் மீது 296 பி, 132, 351 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சம்பவம் இந்த சம்பவத்தின் சிக்கலை மேலும் அதிகமாக்கி உள்ளது. ஓட்டுனரிடம் அத்துமீறிய போக்குவரத்து போலீசார் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுனர் பிரடெரிக் கேரளத்தில் ஆட்டோ ஓட்டுனர்களின் அத்துமீறலையும் , இரு சக்கரவாகன ஓட்டியை தாக்கிய கும்பலை தட்டிக்கேட்டு வீடியோ வெளியிட்டவர் என்பது குறிப்பிடதக்கது.
Back to Top News
Top
July 14, 2026 at 5:45 AM
அரசு பேருந்து போகலாம்... கேரள கார் போக கூடாதா..? என்னங்க சார் உங்க சட்டம் ? ராமேஸ்வரத்தில் நடந்தது என்ன.?
Polimer News