கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது, வெள்ளிமலைப்பட்டினம் கிராம ஊராட்சி. இவ்வூராட்சியின் திமுக கிளை பிரதிநிதியான நாகராஜ் (62) என்பவர், ஆகஸ்ட் 28 ஆம் தேதி வசந்தா(55) என்ற பெண்மணியின் வீட்டிற்கு டீ வாங்கி வந்துள்ளார். அப்போது, வசந்தாவின் பக்கத்து வீட்டைச்சேர்ந்தவரும், நாகராஜின் நண்பருமான திமுக முன்னாள் கிளை அவைத்தலைவர் கந்தசாமி (61) என்பவர், நாகராஜை அரிவாளால் கொடூரமாக வெட்டியதாக கூறப்படுகிறது. கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலின்போது ஏற்பட்ட தகராறில் கந்தசாமிக்கும் கையில் காயம் ஏற்பட்டதாகவும், அவர் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அட்மிட் செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் ஆகியோர், நாகராஜின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உயிர் நண்பர்களுக்குள் உயிரை எடுக்கும் அளவுக்கு பிரச்சனையாக மாற என்னக்காரணம்? விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதுதான் முதற்கட்ட பின்னணி தகவல் தெரிய ஆரம்பித்துள்ளது. பாக்கு வியாபாரம் செய்துவரும் நாகராஜுக்கும் அப்பகுதியிலுள்ள சில பெண்களுக்கும் திருமணத்தைத் தாண்டிய நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த கந்தசாமிக்கு, தனது வீட்டிற்கும் அடிக்கடி தன்னை பார்க்கவந்துள்ளானே? தன் மனைவியுடனும் ஒருவேளை தொடர்பில் இருந்திருப்பானோ? என திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாகராஜுக்கும் கந்தசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றித்தான், தனது பக்கத்து வீடான வசந்தா வீட்டிற்கு நாகராஜ் டீ வாங்கிவரும்போது, கந்தசாமி கத்தியால் மிகக் கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், நாகராஜுக்கும் கந்தசாமியின் மனைவிக்கு அப்படியொரு தொடர்பு எதுவும் இல்லை. ஆனால், சந்தேகத்தால் தனது நண்பனை கொலை செய்துவிட்டார், என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.