பழனி தண்டாயுதபாணி மடத்துக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில்,நிலத்தை விற்பனை செய்த மடத்தின் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், பத்திரப் பதிவு நடைபெற்ற நாளில் இருந்து தலைமறைவாக உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். அத்துடன், நிலத்தை வாங்கிய உடுமலையைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீதும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இணை சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீதும் போலி ஆவணங்களை உருவாக்குதல், போலி ஆவணங்களை உண்மை என நம்பவைத்தல், சொத்து அபகரிப்பு, குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல், கூட்டுச் சதி ஆகிய 5 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பழனி சார்-பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அறநிலையத் துறையில் உள்ள பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், நிலம் தொடர்பான ஆவணங்களைப் பெற்றும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, அறநிலையத் துறை இணை ஆணையர் முருகானந்தம் மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த தாசில்தார், விஏஓ உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி கண்காணிப்பாளர் சாஜிதா விசாரணை மேற்கொண்டார்.