முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைப்போம் என மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம் கட்சி நிகழ்ச்சியில் பேசிய மார்க்கண்டேயன், 'முதலமைச்சர் விஜய் சட்டசபை கதவுகளை மூடினால் எலும்பை உடைப்போம்,' என்று பேசியது சர்ச்சையானது. இது தொடர்பான புகாரில் மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்தது. மார்கண்டேயனை இரண்டு நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் தாக்கல் செய்த மனுவும், ஜாமீன் கோரி எம்.எல்.ஏ மார்கண்டேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு வந்தது. இதற்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து மார்கண்டேயன் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மனு மீதான விசாரணையின் போது மார்கண்டேயனின் பேச்சுக்கு தூண்டுதலாக திமுக நிர்வாகிகள் சிலர் இருப்பதாக சந்தேகிப்பதால் அது குறித்து விசாரிக்க 2 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. அதே போல ஜாமீன் கோரி மார்கண்டேயன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி சுமதி நிராகரித்தார். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட மார்க்கண்டேயன் எத்தனை நாள் சிறையில் இருக்கிறமோ அவ்வளவு வேகமாக ஆட்சி மாறும் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறிச் சென்றார்.