சென்னை பள்ளிக்கரணையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி கோகிலா என்பவர் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலை, அணிவிக்கப்பட்ட 7 சவரன் தங்க நகையுடன் தண்ணீரில் கரைக்கப்பட்ட நிலையில், அந்த நகை பத்திரமாக மீட்கப்பட்டது. வீட்டில் பூஜை செய்த பிறகு விநாயகர் சிலையை பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை அருகே கோகிலா வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். விநாயகர் சிலைக்கு தங்க நகை அணிவித்து பூஜை செய்தது நினைவுக்கு வர, சிலையை வைத்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அந்த இடம் காலியாக இருந்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்தபோது, பள்ளிக்கரணை ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் சேற்றில் புதைந்திருந்த நகை மீட்கப்பட்டது.