தஞ்சை ரயில் நிலையம் முன்பு வி.சி.க சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றியதாக கூறி விசிகவினர் முதலில் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் போராட்டம் நடத்தினர். போலீசார் கண்டுகொள்ளாததால், நேரடியாக சாலையில் அமர்ந்து விசிகவினர் மறியலில் ஈடுபட்டனர், இதனால் அபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் சாமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் “தங்களுக்கு அவசர வேலை இருக்கிறது வழியை விடுங்கள்” என்று கூறியதால் விசிகவினர் அவர்களுடன் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றனர். அவர்களிடம் அந்த இளைஞர் எகிறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளை தாக்க முயன்ற விசிகவினரை , போலீசார் விலக்கி விட்டனர், மேலும் மறியலை தட்டிக்கேட்ட அந்த இளைஞரை , வண்டிய எடுத்துட்டு ஓரமா போடான்னு சத்தம் போட்டனர். அதற்கு அந்த இளைஞரோ, “எனக்கு வேலை இருக்கு வழிய விடுங்க போகனும் ” என்ற தோடு போலீசாரை ஒருமையில் பேசியதால் , டென்சனான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம், அந்த இளைஞரை அடிப்பது போல இரு முறை கையை ஓங்கினார். ஆவேசமான அந்த இளைஞர், “ மறியல் செய்றவனை விட்டு விட்டு,“என்ன அடிப்பியா , அடிடா பார்க்கலாம்” என்று ஒருமையில் கேட்டதும் , எஸ்.எஸ்,ஐ அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். பதிலுக்கு எஸ்.எஸ்.ஐயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் அந்த இளைஞர். விழுந்த அடியில் அவரது தொப்பி பறந்தது. “போலீஸ் மீதே கை வைத்து விட்டாயா..” என்று அந்த இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து , மீண்டும் தாக்கி சட்டையை இழுத்து கிழிக்க முயன்றனர், நீண்ட நேரம் போராடியும் அவரது கையை கூட போலீசாரால் பைக்கில் இருந்து எடுக்க இயலவில்லை. போலீஸ் அடித்ததால் தான் பதிலுக்கு தாக்கியதாக தெரிவித்த இளைஞர், முதலில் அவர் எதற்கு என்னை அடித்தார் ? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். மொத்த போலீசையும் ஒத்தை மனிதனாய் சமாளித்த அந்த இளைஞரை பார்த்த விசிகவினர், சாலை மறியலை கைவிட்டு நைசாக இடத்தை காலி செய்தனர். இதையடுத்து போலீசார், அந்த இளைஞரை பைக்குடன் கீழே சாய்த்து, சட்டையை பிடித்து இழுத்து கழுத்தை கையால் நெரித்து காவல் வாகனத்துக்கு இழுத்து சென்றனர். போலீஸ் வாகனத்தில் அந்த இளைஞரை ஏற்றுவதற்குள் போலீசார் படாத பாடு பட்டனர், “ நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் கைது செய்கிறீர்கள் ? என்ற விரக்தி மிகுந்த ஆத்திரத்தில் காணப்பட்டார் அந்த இளைஞர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்திருப்பதாக அறிவிவித்தனர் போலீசார் முதற்கட்ட விசாரணையில் எஸ்.எஸ்.ஐ அப்துல் ரஹீமை திருப்பி தாக்கிய இளைஞர் விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க போலீசாரின் மெத்தனமான, அலட்சியமான நடவடிக்கையே அப்பாவியான ஒரு இளைஞர் , தன்னை தாக்கிய காவல் அதிகாரியை திருப்பி தாக்கும் அளவுக்கு கொண்டு சென்று விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் போலீசாரிடம் இந்த அளவுக்கு அந்த இளைஞர் ரவுத்திரம் பழகாமல் இருந்திருக்கலாம், ஆத்திரம் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கல்களில் கொண்டு போய்விடும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு சான்று.