புதுக்கோட்டையில், அரசுப்பேருந்தின் தானியங்கி கதவு திறந்ததால் ஓடும் பேருந்திலிருந்து சாலையில் விழுந்து பள்ளி மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். காலையில் பள்ளி செல்வதற்காக அரசுப்பேருந்தில் ஏறிய மாணவிகள், கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தனர். பேருந்தின் முன்புறத்தில் நின்றுகொண்டிருந்த பயணி, கதவின் மேல்புறத்தில் உள்ள Emergency button-ஐ தவறுதலாக அழுத்தியதால் கதவு திறந்ததாக கூறப்படுகிறது. கனமான புத்தக பையுடன் படிக்கட்டியில் நின்றுகொண்டிருந்த மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். வலி தாங்க முடியாமல் அழுத மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பேருந்து ஓட்டுநர் அர்ஜுனனும், நடத்துநர் மணிகண்டனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.