2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார். இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், பிரதமரின் விமானம் சீனா வழியாக நீண்ட தூரம் சுற்றிச் சென்று தாஷ்கண்ட் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் ஆரத்தழுவி வரவேற்றார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தாஷ்கண்ட் நகரின் முக்கிய கட்டடங்கள் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண நிறங்களில் ஒளிரவிடப்பட்டன. உஸ்பெகிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் கலாச்சார உறவை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடியும் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத்தும் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாஷ்கண்ட் நகரில் உள்ள யாங்கி பூங்காவில், உஸ்பெகிஸ்தான் சுதந்திரம் பெற்றதன் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிறுவப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் இணைந்து மரியாதை செலுத்தினார்.