சென்னையில் மாலை, இரவில் மழை வாய்ப்பு சென்னை பெருநகர் மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதேவேளை, சென்னையில் இன்றைய பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 3 வரை மழை வரும் செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், வட கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மழையுடன் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பகலில் வெயில்; மாலையில் மழை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் மழைப்பொழிவு இருந்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.