இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பனி இழப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளதால், இந்து குஷ் இமயமலை முழுவதும் உள்ள பனியாறுகள் மிக வேகமாக உருகி வருவதாக ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு அறிக்கைகள் எச்சரித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேபாளம் - திபெத் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் கொத்து கொத்தாக உயிரிழந்ததும், பலர் காணாமல் போய் தேடப்பட்டுவருவதும் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், நேபாளத்தில் இரண்டாவது அலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சம் வலுப்பெற்ற நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆக்ஸ்ட் 28 ஆம் தேதி நிலவரப்படி, 547-ஐத் தாண்டியது. நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 320 இந்தியர்கள் வரை இன்னும் காணாமல் போயுள்ளனர், மேலும் சுமார் 400 பேர் சீனா பக்கத்தில் சிக்கியுள்ளனர். காத்மாண்டுவின் மீட்புப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28, 2026) அன்று தெரிவித்தது. மேலும், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 ஆக இருக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். அவர்கள் அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளரைச் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், நேபாளத்தில் இருந்து டெல்லி திரும்பிய 21 பேரைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் தங்களுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களைத் தவறவிட்டுவிட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து இருப்பதாகவும் அவர்கள் விரைவில் சென்னை திரும்புவார்கள் என்றும் அவர் கூறினார். இந்தநிலையில் மீதமுள்ள தமிழர்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்த நிலையில், "57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை எப்படியாவது தொடர்புகொள்ள கடுமையாக முயன்று கொண்டிருக்கிறோம். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கி வருகிறது. வெளியுறவுச் செயலாளருடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். மத்திய அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் சென்று காணாமல் போனவர்களைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளோம்." என்றார். மேலும், "இதே போல, மேலும் பல குழுக்கள் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு விமானத்தில் சென்ற 140க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிக்கியுள்ளார்கள். அவர்களை காத்மாண்டு அழைத்து வந்து அங்கிருந்து டெல்லி அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் மூலம் சென்றவர்களும் இருக்கிறார்கள். பெரிய குழுக்கள் மூலம் சென்றவர்கள் தவிர சிறு சிறு குழுக்களாகச் சென்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இந்தநிலையில்தான், காத்மாண்டுவைத் தலைமையிடமாகக் கொண்ட, இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் சீனா உள்ளிட்ட பிராந்திய உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD), தனது இரண்டு அறிக்கைகளில் , 1975-ஆம் ஆண்டு முதல் 27 மீட்டர் வரையிலான பனியாற்றுப் பனியின் தடிமன் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது, பனிப்பாறைகள் உருகி தடிமன் குறையும் போது, அந்த நீர் இறுதியில் கடலில் கலக்கிறது. இதனால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. தனித்தனியாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இரண்டு ICIMOD அறிக்கைகள், "1990 மற்றும் 2020-க்கு இடையில், HKH பனிப்பாறைகள் அவற்றின் மொத்தப் பரப்பளவில் சுமார் 12 சதவீதத்தையும், மதிப்பிடப்பட்ட பனி இருப்பில் 9 சதவீதத்தையும் இழந்தன" என்று கூறியிருந்தன. ICIMOD-இன் ஓர் அறிக்கையில், ' HKH பனிப்பாறை கண்ணோட்டம் 2026' என்ற அறிக்கையில், 38 பனிப்பாறைகளில், 2000-ஆம் ஆண்டிலிருந்து பனிப்பாறைச் சிதைவு இருமடங்காகியுள்ளது என்றும், இது "இமயமலைப் பனிக்கோளத்தின் சில பகுதிகள் மீளமுடியாத நெருக்கடியான திருப்புமுனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான வலுவான அறிகுறி” என்றும் கண்டறிந்திருந்தது. எனவே, உயரமான இடத்திலிருந்து உருவான பனிப்பாறைச் சரிவு, வெள்ளப்பெருக்கைத் தூண்டியிருக்கக்கூடுமா என்பதை ICIMOD ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். போட் கோஷி ஆற்றின் துணை நதியான லெண்டே கோலா ஆற்றிற்குள் பெருமளவிலான பனி மற்றும் பாறைச் சிதல்கள் நுழைந்திருக்கலாம். அது, நீர், வண்டல் மற்றும் பாறாங்கற்களை கீழ்நோக்கி அடித்துச் செல்லும் ஒரு திடீர் வெள்ளப்பெருக்கை உருவாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.