இங்கிலாந்தில் 800 ஆண்டுகள் பழமையான நடைமுறையாக, தேம்ஸ் நதியில் உள்ள அன்னப்பறவைகளை கணக்கெடுக்கும் ஸ்வான் அப்பிங் (Swan Upping) எனப்படும் பணி தொடங்கியுள்ளது. விருந்துகளுக்காகவும் கொண்டாட்டங்களுக்காகவும் அன்னப்பறவைகளை வேட்டையாடுவதற்காக 12-ஆம் நூற்றாண்டில் இந்தச் சடங்கு தொடங்கப்பட்டது. தேம்ஸ் நதியில் உள்ள அன்னப்பறவைகள் அனைத்தும் பிரிட்டன் மன்னர் சார்லஸுக்குச் சொந்தமானவையாகும். அந்த வகையில், லண்டனுக்கு அருகில் உள்ள சன்பரியில் தொடங்கி ஆக்ஸ்போர்டு அருகில் முடிவடையும் 79 மைல் நீளமுள்ள தேம்ஸ் நதியில், மன்னரின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாளர் டேவிட் பார்பர் தலைமையிலான குழுவினர்,பாரம்பரியமான 6 சிறு துடுப்புப் படகுகளில் சென்று அன்னப்பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 115 அன்னப்பறவைகள் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டது.