விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கத்தில் பொருத்துவதற்காக வாங்கப்பட்ட ஏசி இயந்திரங்களில் ஒன்றை, மாநகராட்சி ஆணையாளர் தனது வீட்டில் பொருத்திக் கொண்டதாக மாமன்றக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர் நேரடியாகக் குற்றம்சாட்டினார். அதேபோல் மாநகராட்சிப் பணியாளர்களை தனது வீட்டில் தனது சொந்த வேலைக்காக ஆணையர் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டிய நிலையில், ஆணையர் கண்ணன் பதில் பேச முடியாமல் திகைத்தபடி அமர்ந்திருந்தார். அதேபோல் பேப்பர் கப் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பதற்கான உரிமம் வழங்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு, ஆயிரம் ரூபாய்க்கு அதிகாரிகள் ரசீது கொடுத்திருப்பதாக மற்றொரு பெண் கவுன்சிலர் குற்றம்சாட்டினார். லஞ்சம் கொடுத்தவர்களையும் கூட்ட அரங்குக்கு நேரில் அழைத்து வந்து குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அரங்கில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி, கடந்த 2024ஆம் ஆண்டு அவரிடம்தான் லஞ்சத்தைக் கொடுத்ததாகக் கூறிய நிலையில், அந்த அதிகாரி பதற்றத்தில் ஆழ்ந்தார்.