சென்னையில் வாக்கிங் சென்ற தொழிலதிபரை காரில் கடத்தி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை சினிமா பாணியில் போலீசார் பொறிவைத்து பிடித்தனர். சேத்துப்பட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் கமலேஷ் ஆப்ரஹாம் என்பவர் நேற்று காலை நேரு பூங்கா அருகே காரில் கடத்தப்பட்டார். காரில் இருந்த முகமூடி கும்பல் தொழிலதிபரை கொலை செய்யப் போவதாக மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளது. அதற்கு 30 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய தொழிலதிபர், தன்னை இறக்கி விட்டால் வீட்டிற்கு சென்று எடுத்து வருவதாகக் கூறியுள்ளார். 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அவரை அந்த கும்பல் இறக்கிவிட்டது. 2 மணிநேரத்தில் கடத்தல் கும்பல் கமலேஷை செல்போனில் தொடர்பு கொண்டு மிண்ட் அருகே பணத்தை கொண்டு வருமாறு கூறியுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்த கமலேஷ், காவலர்களின் அறிவுறுத்தல்படி பணம் இருப்பது போல் பையை கையில் வைத்துக் கொண்டு மிண்ட் அருகே சென்ற போது அதைப் பெறுவதற்காக வந்த ஜெய்சரவணன் என்பவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவன் அளித்த தகவலின் பேரில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அவனது நண்பர்களான ஜெயகுமார், ராம்குமார், பொன்னி வளவன் ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இதில் ராம்குமார் என்பவன் கமலேஷிடம் வேலை செய்த போது அவரிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதை அறிந்து நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து பணம் பறிக்க திட்டமிட்டது அம்பலமானது.