சேலம் அம்மாபேட்டை பகுதியில் ஆடிதிருவிழாவை முன்னிட்டு சம்பவத்தன்று இரவு அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் ஆலயம் அருகே இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இசை நிகழ்ச்சியை கேட்க வந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் மது போதையில் இருதரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருதரப்பு இளைஞர்களும் அம்மாபேட்டை காமராஜர் வளைவு அருகே வந்து சாலையில் கட்டி புரண்டு சண்டையிட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அம்மாபேட்டை காவல் நிலைய பெண் காவல்உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார், போதை பாய்ஸை ஓட விடாமல் சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். தப்பிக்க முயன்ற இளைஞரை தலைமுடியை பிடித்து பளார் என்று அறைவிட்ட எஸ்.ஐ. புவனேஸ்வரி , அந்த கும்பலை சாலையோரமாக அமர வைத்தார். போலீசாரின் கைகளை தட்டி விட்டு ஓடமுயன்ற 5 போதை பாய்ஸுக்கு சிறப்பு கவனிப்பு அளித்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். சேலம் மன்னார் பாளையம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் கடந்த திருவிழாவில் தங்களை தாக்கியதற்கு பழிக்கு பழியாக போதை இளைஞர்கள் அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கௌதம், ஹரி பிரசாத், தனுஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ள போலீசார்,தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.