தாம்பரம் மாநகராட்சியில் ரவுண்டானா புதுப்பிக்கும் பணிகள் முடிந்து திறந்து வைத்த பின்பு, அதற்காக டெண்டர் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அம்மாநகராட்சியின் ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், ஆவடி மாநகராட்சி ஆணையர் கூடுதலாக தாம்பரம் ஆணையர் பொறுப்பை கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக டெண்டர் வழங்குவதற்காக அதன் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே சுமார் 45,90,000 ரூபாய் மதிப்பிலான 2 பணிகள் முடிக்கப்பட்டதாகவும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் இந்த பணிகளைத் திறந்து வைத்ததாகவும் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை இணையதளத்தில் பாலச்சந்தர் பதிவேற்றம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுககப்பட்டுள்ளது.