நாளை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 6 ஆயிரத்து 500 போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்படவுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து சென்றுள்ள பிரதேயக் குழு பூ அலங்காரப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சித்திரை வீதிகளில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, பக்தர்களை சீரான இடைவெளியில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான தற்காலிகக் குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், பார்க்கிங் வசதிகள், அவசர கால உதவி மையங்கள் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.