தமிழகத்தில் FQL நிதி மோசடி தொடர்பான புகார்கள் 40 ஆயிரத்தை நெருங்கின. இதுதொடர்பான வழக்குகள் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சியில் முதலீடு, இருமடங்கு லாபம் என ஆசை காட்டி, முதலில் சிறிய தொகைக்கு இரு மடங்கு பணத்தைக் கொடுத்து இந்த மோசடி அரங்கேறியுள்ளது. பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு பெருந்தொகையை கொடுத்து ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். 400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், விசாரணையின் முடிவில் தான் உண்மையான மதிப்பு தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்ட 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.