இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம் 1’-ன் சோதனை ஏவுதல் திட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்த விக்ரம் 1 ராக்கெட், குறிப்பிட்ட புவி சுற்றுவட்ட பாதையில் ஆய்வுக்கலன்களை நிலை நிறுத்தியது. முன்னதாக தொழில்நுட்பக் கோளாறால் 35 நிமிடங்கள் ராக்கெட் ஏவும் பணி தாமதமானது. தொடர்ந்து கோளாறு சரிசெய்யப்பட்டு விக்ரம் 1 விண்ணில் பாய்ந்து, அனைத்து நிலைகளும் திட்டமிட்டபடி பிரிந்து, 450 கிலோமீட்டர் உயரத்தில் கலன்கள் நிறுத்தப்பட்டன. அதனை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன விஞ்ஞானிகள் கொண்டாடினர். இதனிடையே, ராக்கெட் ஏவுதல் திட்டத்தின் முதல்முயற்சியிலேயே வெற்றி பெற்ற ஸ்கைரூட் குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக இளம் விஞ்ஞானிகளை பாராட்டினார். விக்ரம் 1 ராக்கெட்டில் ஸ்கைரூட் நிறுவனத்தின் ஸ்கோப் உள்ளிட்ட பல ஆய்வுக் கருவிகளும், பிரதமர் உள்ளிட்டோர் எழுதிய கடிதங்களும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.