மதுரை மத்திய தொகுதி தவெக உறுப்பினர் மதார் பக்ருதீன், கடந்த கால ஆட்சியில் இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என திமுகவினர் பேசியதாகவும், இஸ்லாமியர்களை காயிதே மில்லத் தங்களிடம் ஒப்படைத்திருப்பதாக பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், முஸ்லிம் தீவிரவாதிகள் என திமுகவினர் 5 முறை பேசியதாக குற்றம்சாட்டிய அவர், பத்திரிகையில் வந்த செய்தியை வைத்து பேசவில்லை என்றும், ஆதாரத்துடன் பேசுவதாகவும் கூறினார். "நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நசுக்கப்பட்டு இருக்கிறேன்" எனவும் மதார் பக்ருதீன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "ரொம்ப நாளாகவே இது நடக்கிறது, இதை அனுமதிக்கக் கூடாது" என்றார். மேலும், வசந்தம் கார்த்திகேயன் அடிக்கப் பாய்ந்து வந்ததாகவும், அவரை எ.வ.வேலு கட்டி அணைத்து தடுத்ததாகவும் தெரிவித்தார். திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனும் அடிப்பதற்கு பாய்ந்து வந்ததாகக் கூறிய ராஜ்மோகன், திமுகவினரின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றார். உருட்டி மிரட்டியதால்தான் மக்கள் தகுந்த தீர்ப்பு வழங்கி அவர்களை அங்கு அமர வைத்துள்ளதாகவும், உட்கார்ந்து பேச வேண்டும் என்றும், எழுந்து நின்று ஒருமையில் பேசுவது நாகரிகம் இல்லை என்றும் தெரிவித்தார். மதார் பக்ருதீன் பேச்சுக்கு ஆதாரம் இல்லை என்றால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கலாம் என்றும் கூறினார். இதையடுத்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், தவெக உறுப்பினரின் பேச்சு தவறு என்றால் நீக்கிவிடலாம் என்றார். தவறாக இருந்தால் கண்டிப்பாக நீக்குவேன் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி.செழியன், அரசியல் ரீதியான பிரச்சனை என்றால் மணிக்கணக்கில் கூட பேசலாம் என்றும், முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் கூட இதைத்தான் வலியுறுத்துகிறார் என்றும் தெரிவித்தார். மதம் சம்பந்தமாக பேசும்போது பார்த்துப் பேச வேண்டும் என்றும், "தீவிரவாதிகள் என திமுக கூறியதாக" மதார் பக்ருதீன் தெரிவித்த கருத்துக்குத்தான் ஆட்சேபம் என்றும் கூறினார். மேலும், இஸ்லாமியர்களுக்கு எப்போதும் திமுக பாதுகாப்பு அரண் என்றும் கோவி.செழியன் தெரிவித்தார். ஆதாரப்பூர்வமாக இருந்தால் ஆதாரத்தைக் காண்பித்துவிட்டு பேசலாம் என சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, சிதம்பரம் எம்.எல்.ஏ.வும் மஜகவைச் சேர்ந்தவருமான தமிமுன் அன்சாரி, இங்கு பேசப்படும் கருத்துகள் வெளியே சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றார். இங்கிருக்கும் அனைவருக்கும் சமூக நல்லிணக்கத்தின் மீது இயல்பாகவே அக்கறை உண்டு என்றும், கட்சி வேறு வேறாக இருக்கலாம்; ஒரு தாய் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார். உணர்ச்சிகரமான ஒரு விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்து கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மதார் பக்ருதீன் தன்னிடம் ஆதாரத்தை காட்டிவிட்டதாக தெரிவித்தார். அவையின் மாண்பு கருதி அந்த ஆதாரங்களை ஆய்வில் வைத்துக் கொள்வதாகவும், ஆதாரங்களை தான் பார்த்துவிட்டதாகவும், வேறு விவாதத்திற்கு செல்லலாம் என்றும் தெரிவித்தார்.