தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தை சேர்ந்த 10 பேர் , தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து, அதற்கான ஆணைகள் கிடைத்த பிறகும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பேசியபோது, பட்டா வேண்டும் என்றால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என முடிமன் கிராம நிர்வாக அலுவலர் கணபதி கேட்டு, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் என கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்கியதாக தெரிவித்தனர். பட்டாவை இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என கிராம நிர்வாக அலுவலர் கணபதி அலைக்கழித்ததால், விரக்தி அடைந்தவர்கள், பட்டாவே வேண்டாம் வாங்கிய பணத்தையாவது திருப்பி தந்து விடுங்கள் என போனில் கேட்டதற்கு, காசு கொடுத்த பிறகு திருப்பி கேட்குறீங்க, அதை முதல்லயே சொல்லியிருக்கலாமே? என பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டதோடு, நீங்களாவது பரவாயில்லை, இன்னொருத்தர் எல்லாம் பாதி காசு தான் கொடுத்தாரு, என் சொந்த காசை கொடுத்தென் என அந்த கிராம நிர்வாக அலுவலர் கணபதி உத்தமர் போல பேசியிருந்தார். இதே போல இன்னொரு நபரும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர் கணபதி, நான் தாசில்தார், ஆர்ஐக்கு தானே காசு கொடுத்தேன், ஆக்கிரமிப்பு செய்ததை இடிக்காம விடமாட்டேன், 60 ஆயிரம் ரூபாய் போனால் போகட்டும், அதை எப்படி சம்பாதிப்பது என தனக்கு தெரியும் என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மிரட்டியுள்ளார். இதுகுறித்து எமது செய்தியாளர் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கணபதியிடம் கேட்டபோது, பணம் எனக்காக வாங்கவில்லை என தெரிவித்தவர் பாதியிலேயே அழைப்பை துண்டித்தார். முன்னாள் ராணுவ வீரராக இருந்த கணபதி, பின்னர் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர்ந்ததும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக இவர் பணிபுரிந்த போது இவர் மீது ஏற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பனிஷ்மென்ட் டூட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, இங்கும் அவர் லஞ்சம் வாங்குவதை மாற்றிக் கொள்ளவே இல்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் கணபதி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பட்டா வழங்கப்பட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.