ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் நாட்டின் முதல் பயணிகள் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர், கொடியசைத்து அந்த ரயிலின் சேவையை தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள ஐ.சி.எஃப்.-இல் தயாரிக்கப்பட்டுள்ள 10 பெட்டிகளை கொண்ட அந்த ரயில், ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மணிக்கு அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ரயில், முதற்கட்டமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த ரயிலில் 2600 பேர் பயணிக்க முடியும். விழாவில் உரையாற்றிய பிரதமர், 'மேக் இன் இந்தியா' பிரச்சாரத்தின் வெற்றிகரமான உதாரணம் ஹைட்ரஜன் ரயில் திட்டம் என்றும், அந்த வகை ரயில்களை இயக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் பிற நாடுகளில் அத்தொழில்நுட்பம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளதாக கூறிய பிரதமர், இந்தியா தொடக்க நிலையிலேயே 10 பெட்டிகள் கொண்ட ரயிலை அறிமுகப்படுத்தி உலக அளவில் முத்திரை பதித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.