கோவை மாமன்ற கூட்டம் கூடிய சிறிது நேரத்தில் மேயர் மற்றும் ஆணையரை முற்றுகையிட்டு நின்ற காங்கிரஸ் கவுன்சிலரும், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலத்தின் மகளுமான காயத்திரி,கோவை மாநகராட்சியில் 40 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தைருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதை சுட்டிக்காட்டினார். மாநகராட்சியில் புதிய திட்டங்களுக்கு கவுன்சிலர்கள் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுத்த நிலையில் பணிகள் நடைபெறாமலேயே ரூ 40 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டது எப்படி ? என்று கேள்வி எழுப்பினார் காயத்திரி. இதனை கண்டித்த திமுக கவுன்சிலர்கள் காயத்திரியை கையை பிடித்து இழுத்து கீழே இறக்கினர், மீண்டும் மேலே ஏற விடாமல் தடுத்து தாக்கி, சேலையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்திய திமுக கவுன்சிலர் மாரிச்செல்வம் என்பவர் காங்கிரஸ் கவுன்சிலருக்கு பின்னால் பதுங்கிக் கொண்டு கையால் தட்டி அவரை ஏற விடாமல் தடுத்தார். இருந்தாலும் ஊழல் குறித்து தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்த காயத்திரியை முற்றுகையிட்ட திமுக கவுன்சிலர்கள் , “கடந்த 4 வருஷமா எங்களை விட திமுகவை புகழ்ந்து புதிய திட்டங்களை பெற்றது நீங்க தானே, இப்ப வந்து குறை சொல்றீங்க, வெளியே போங்க..” என்று விரட்டினர். வெளியே வந்த கவுன்சிலர் காயத்திரி, தான், காலணி வெங்கடாசலத்தின் மகள் என்றும் தன்னை யாரும் தடுத்து விட முடியாது என்றும், தன் மீது கைவைத்தவர்களை முதல் அமைச்சர் விஜய் தூக்கி உள்ளே போட்டு விடுவார் என்றும் எச்சரித்தார். சற்று நேரத்தில் கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரியும், அவரை கையை பிடித்து தாக்கிய திமுக பெண் கவுன்சிலர் மீனாவும் தோள் மீது கை போட்டுக் கொண்டு வெளியே வந்தனர். காங்கிரஸ் கவுன்சிலர் சீன் போடுவதாக குற்றஞ்சாட்டிய திமுக கவுன்சிலர், தவெகவினர் ரீல்ஸ் எடுத்து போட்டு தாங்கள் செய்த பணிகளை அவர்கள் மேற்கொண்டது போல வீடியோ வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார். இதற்கிடையே கோவை மாநகராட்சியில் புதிய திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றிக்கு கவுன்சிலரின் ஒப்புதல் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளேயும் வெளியேயும் திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் அடித்த அரசியல் ஸ்டண்ட்டால் செய்தியாளர்கள் திக்குமுக்காடி போயினர்.