பழநி கோயில் நில மோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட தி.மு.க.வின் பரந்தாமன், நிலம் பதிவு செய்தபோது கொடைக்கானலில் இருந்து அதிகாரியை அழைத்து வந்து பத்திரப்பதிவு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த அவர்,பழனி சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் விடுமுறையில் இருந்த காரணமாக பதிவு செய்ய முடியாமல் இருந்த நேரத்தில் எப்படி கொடைக்கானலைச் சேர்ந்த அதிகாரியை வைத்து இந்த நிலம் பதிவு செய்யப்பட்டது? என வினவினார். குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் சொத்து வாங்கக்கூடிய அளவிற்குக் கூட பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் இல்லை என்ற நிலையில், எப்படி ரூ.2 கோடியில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என பரந்தாமன் கேள்வி எழுப்பினார். மேலும், பத்திரப்பதிவு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் முன்னுக்கு பின் முரணாக பேட்டியளித்ததாக பரந்தாமன் குற்றஞ்சாட்டினார். அழுத்தம் காரணமாக சார் பதிவாளர் நிலத்தை பதிவு செய்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு வாதம் வைத்தது ஏன்? என வினவிய அவர், அப்படி அழுத்தம் கொடுத்தது யார்? நிலத்தை வாங்கியவர்கள் யார்? என்றும் கேள்வி எழுப்பினார்.