சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதாகவும், இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்தால் நடப்பு ஆண்டில் தமிழகத்திற்கு 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், மாநில அரசுகள் தன்னிச்சையாக விதிக்க முடியாது எனவும், கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் உள்ள வரியை மாநில அரசுகளுக்கு செலுத்தத் தேவையில்லை எனும் நிலை ஏற்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி மற்றும் உரிமம் மூலம் தமிழக அரசுக்கு 4 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது, நடப்பு ஆண்டில் 11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையை பறிக்கும் இந்த சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அன்புமணி, அதேவேளையில் தமிழக அரசு கனிமவளங்களை முறையாக கையாண்டால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரையில் வருவாய் ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.