திருப்பத்தூர் மாவட்டம், கண்ணாலப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவர்கள் 14 பேரை ஏற்றிக் கொண்டு, பள்ளியில் இருந்து திரும்பிய ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நித்திஷ் என்ற 9ஆம் வகுப்பு மாணவர் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். ஆட்டோவை ஓட்டியபடி கண்ணாடியை துடைக்க ஓட்டுநர் முயன்றதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்த தாயார், இதுபோன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று கண்ணீர் விட்டார். மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய திருப்பத்தூர் எம்எல்ஏ திருப்பதியிடம், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல ஆட்டோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மகனை இழந்த பெண் கேட்டுக்கொண்டார்.