நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் தரமற்ற நிலையில் விநியோகிக்கப்படுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகளில் சில தொடர்ந்து கெட்டுப்போன நிலையில் இருப்பதாகவும், இதனால் குழந்தைகளின் உடல் நலன் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு நிர்ணயம் செய்துள்ள எடைக்கு ஏற்ப முட்டைகள் வழங்கப்படுவதில்லை என்றும், அதற்கு பதிலாக எடை குறைந்த சிறிய அளவிலான முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் முட்டைகளின் எடை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, குழந்தைகளுக்கு தரமான முட்டைகள் மற்றும் அரசு நிர்ணயித்த எடையில் முட்டைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.