ஆடி அமாவாசையை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு - சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில், சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மலைப்பாதையில் சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் தொடர்ந்து காத்திருக்கும் பக்தர்கள், நிலைமை சீராகி மலைக்குச் செல்ல அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். நாளை நடைபெறும் ஆடி அமாவாசை விழா மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் இன்றுக்குள் காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டால் நாளை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது