சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ செந்தில்குமாரின் சட்டையை பிடித்த பிரதீப்பின் தாயார் டில்லி ராணி, இவர் தான் தன்னை தள்ளிவிட்டார் என்றதோடு, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தனது மகனை துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என மிரட்டிதாகவும் தெரிவித்தார். நடந்தது என்ன? கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியானது. இறந்த பிரதீப் திமுகவின் 10 வது வார்டு பாக அமைப்பாளராக இருந்ததோடு, ஆர்பரில் வேலை பார்த்து வந்துள்ளார். பிரதீப்பின் தாயார் டில்லி ராணி, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த நவநீதம் என்ற பெண்ணிடம் தொழில் செய்வதற்காக 15 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். அதில் 6 லட்சம் ரூபாய் வரை டில்லி ராணி, கொடுத்த நிலையில் 9 லட்சம் ரூபாயை தரவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல டில்லி ராணி மூலமாக நவநீதம் சிலருக்கு பணம் கொடுத்து இருந்துள்ளதால், அந்த பணமும் வராத நிலையில் இதுகுறித்து நவநீதம் கேட்ட போது இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் 15 வருடங்களாக நண்பர்களாக இருந்த பிரதீப்பிற்கும், நவநீதத்தின் மகன் நவீனும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது. மாறி மாறி கொலை மிரட்டல்..! இனி பணத்தை தரமாட்டோம் உன்னால் முடிந்ததை பார் ..தொடர்ந்து தொல்லை கொடுத்தால் அட்ரெஸ் இல்லாமல் ஆக்கி விடுவேன் என பிரதீப் கூறியதாகவும், அதே போல நவீனும் உன்னை கொலை செய்து திருச்செந்தூரில் வீசிவிடுவேன் என மாறி மாறி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது..! டில்லி ராணியின் மகன் பிரதீப் தனது கையை பிடித்து இழுத்து, தாக்கிவிட்டதாக நவநீதம் தைராய்டு மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நவநீதம் அளித்த புகாரின் பெயரில் பிரதீப்பை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் கைது செய்தார். பிரதீப்பை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆனால் நீதிமன்றத்தில் இது காவல் ஆய்வாளரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஆதாரமில்லாத அவதூறு என்று பிரதீப்தரப்பு வழக்கறிஞர் வாதாடியதால் நீதிபதி அவரை காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார். இதனால் பிரதீப் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை இருவேளையும் பிரதீப் கையெழுத்து போட்டு வந்தார். கடந்த 30ந்தேதியுடன் கையெழுத்து போட்டு முடித்த நிலையில் தன் மீது பொய் வழக்கு போடவைத்த நவநீதத்தின் மகன் நவீன் மீது பிரதீப் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. கொலைக்கு முன்பு இன்ஸ்பெக்டர் அழைத்தது ஏன்? நவநீதம் நடத்தி வரும் டிபன் கடை எதிரே ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைப்பது வழக்கம். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் உள்ள நிலையில், இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் என்ற நோக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் கடந்த 8 ஆம் தேதியன்று இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, பிரதீப் தன்மீது வழக்கு பதிவு செய்த நவநீதம் குடும்பத்தை விடமாட்டேன் என்றும் நவநீதத்தின் உறவினர் சத்யா (45) என்பவர் ரேஷன் அரிசி கடத்துகிறார் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் மேலும் பகை ஏற்பட்டு கொலை சம்பவம் வரை சென்றது தெரியவந்துள்ளது. நான்கு பேர் கைது..! இந்த கொலை சம்பவம் தொடர்பாக கந்துவட்டி புகாருக்குள்ளான நவநீதத்தின் மகன் நாராயணன் என்கிற நவீன் (32), ஹரி கிருஷ்ணன் (21), ஜபார் (24) லோகேஷ் (27)ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் A1 என்று போலீசாரால் குறிப்பிடப்பட்டுள்ள நவீன் , 10 வது வார்டு திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.