“அதாகப்பட்டது sir, கடல்ல கப்பல் போகுது, வானத்துல aeroplane போகுது, roadல பஸ்ஸு போகுது. அந்தமாதிரி பயணத்தின்போதுகூட வாங்கமுடியாத பல அரிய பொக்கிஷங்களை, நீங்க போற இந்த ரயில் பயணத்துல வாங்கலாம் சார்” என பிதாமகன் படத்தில் சூர்யா கூவி கூவி விற்பதுபோல...ஆறு மாசம் கெடாத கொழம்பு... சிக்கன், மட்டன், எறாவுல நான் வெஜ் ஊறுகாய் என இன்ஸ்டாகிராம்ல வீடியோவா எடுத்து போட்டு கூவி கூவி வித்துக்கிட்டிருக்காங்க. இதுபற்றியெல்லாம் இன்ஸ்டாவுல ஒருத்தர், ஐநூறு அறநூறுக்குக்குமேல வீடியோக்களா போட்டு குவிச்சிக்கிட்டிருக்கார். ஆனா, ஆளாளுக்கு இன்ஸ்டாவுல இதுசம்பந்தமா ‘கத்தியின்றி ரத்தமின்றி’ அடிச்சுக்கிட்டு கிடக்கிறாங்களே தவிர, அதுபற்றி சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுக்கிற மாதிரியே தெரியலையே? ” என சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் குறித்து, நெட்டிசன்கள் இப்படித்தான் ட்ரோல் செய்துவருகிறார்கள். அதுவும், fssai சர்டிஃபிகேட் எல்லாம் பக்காவா வாங்கித்தான் தயாரிக்கிறோம்னு ஆளாளுக்கு ஒரு சர்டிஃபிகேட்டை வேற காண்பிக்கிறாங்க. இதையெல்லாம் நம்பி, வாங்கி சாப்பிடலாமா? வேண்டாமா? என குழம்பவைக்கும் குழம்பு மட்டுமல்ல, இல்லத்தரசிகள்- தொழில் முனைவோர் என்கிற பெயரில் திரும்புன திசையெல்லாம் நடத்தப்படும் “எக்ஸ்போக்கள்”, குதிரையின் காலிலிருந்தே கழட்டப்பட்ட குதிரை லாடத்தால் ஏற்படும் யோகம் என அடித்துவிடும் “குதிரை லாட லேடி” , சுரக்காய் குடுவை... கும்பம் மந்திர தகடு..என எக்கச்சக்கமான ஸ்கேம்கள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, வீடியோ வெளியிடும் “மணி ப்ரோ” என அழைக்கப்படும் மணிகண்டன் சங்கரநயினார் என்பவர் வெளியிடும், குற்றச்சாட்டு வீடியோக்கள் எல்லாம் உண்மைதானா? கார்ப்பரேட் கம்பெனிகளின் தயாரிப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, தொழில் முனைவோராக மாறும் இல்லத்தரசிகளை டார்கெட் செய்து வீடியோ வெளியிட்டு மிரட்டுகிறாரா? என சர்ச்சை விமர்சனங்கள் றெக்கை கட்டி பறந்து, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆறுமாதம் கெடாத பூண்டு, மிளகு குழம்பு குறித்து பேசி அந்த மணி ப்ரோ, வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பெண்மணி ஒரு பெரிய பாத்திரத்தில் கிண்டியபடி பேசுகிறார். “இன்னைக்கு நம்ம மெஷின்ல புது ஐட்டம்தான் ரெடி பண்ணியிருக்கோம். என்னன்னு பார்த்தீங்கன்னா, பூண்டு-மிளகு கொழம்புதான் ரெடி பண்ணியிருக்கோம். இது, அஞ்சிலிருந்து ஆறு மாசம் வரைக்கும் நமக்கு கெட்டுப்போகாது. அந்தளவுக்குத்தான் நாம செய்யுறோம்” என்கிறார். இதுகுறித்து பேசிய மணி ப்ரோவோ, “ஏங்க, அஞ்சாறு மாசம் கெடாம இருந்தா அது குழம்பு இல்ல, வெஷம்! பிரசர்வேட்டிவ் எதுவுமே சேர்க்கலைன்னா ஒரு குழம்பு ரெண்டு நாள் தாக்கு பிடிக்காது. புளியோதரையா இருந்தா நாலு நாள் தாக்கு பிடிக்கும் அவ்ளோதான். நீங்க ஒரு மெஷினை கிரைண்டர் மாதிரி வெச்சு, அருவாள் மாதிரி வெச்சு சுத்தி, பூண்டு மிளகு குழம்பு வைக்கமுடியாத அளவுக்கு எங்க வீட்டு பெண்கள் சோம்பேறி ஆகிட்டாங்க?” என வீடியோவில் சாடியுள்ளார். அடுத்ததாக, ஊறுகாய் தயாரிக்கும் ஒரு குடும்பத்தின் வீடியோவை வெளியிட்டு, “ஒரு குடும்பமே சேர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டுல இருக்கிற வீட்டுல இருக்கிற பெண்களை வெச்சு பயங்கரமா ஆதாயம் அடைஞ்சுக்கிட்டிருக்காங்க, மொட்டை அடிக்கிறாங்க” என கூறிய அந்த மணி ப்ரோ, “இந்த அம்மா சமையல் செய்வதுபோல் ஆரம்பித்தார்கள். உங்களுடைய சோம்பேறித்தனத்தை யூஸ் பண்ணி வளர்ந்துக்கிட்டிருக்காங்க. ஆறுமாசம் எப்படி கெடாம இருக்கும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்ததுதான், குதிரை லாட உருட்டு. அந்த வீடியோவில் பேசும் பெண்மணியோ “குதிரை லாடம்தான் பேக் செய்கிறேன். நிறைய பேரு மூணு வேணும், நாலும் வேணும், என்னோட ஃபேமிலிக்கு, அம்மாவுக்கு, சிஸ்டருக்கு வேணும்னு கேட்கிறாங்க. ஒரு சில பேரு குதிரை லாடம் வாங்கினதுப்பிறகு எப்படி இதை பூஜை பன்றதுன்னு கேட்கிறாங்க. குதிரை லாடத்தை நான் பூஜை பண்ணிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து கொடுப்பேன். நீங்க வாசலில், யூ ஷேப்பில் கட்டிவிடவேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பன்னீரால் துடைத்துவிட்டு, அப்படியே மஞ்சள் குங்குமம் வைத்தால் போதும். முக்கியமா கண் திருஷ்டி, தேவையில்லாத நிகழ்வு, உடம்பு முடியாம போகும். இதை கட்டினா, இந்த மாதிரி விஷயங்கள் நடக்கவே நடக்காது. ஒரு குதிரை லாடம் இருந்தால் போதும், குடும்பத்துல இருக்கிறவங்களோட உடல்நலமும் மனநலமும் சம நிலையில் இருக்கும். நம்பருக்கு காண்டேக்ட் பண்ணுங்க” என வீடியோ வெளியிட, குதிரை லாடத்தை வீட்டுல கட்டினா கெட்ட விஷயங்கள் நடக்காதுங்கிறீங்களேம்மா? குதிரை காலில் இருந்த லாடத்தை பிடுங்கிட்டு வந்துட்டா, குதிரை எப்படிம்மா நடக்கும்? அதோட உடல்நலமும் மனநலமும் என்னமா ஆகுறது? எப்பா குதிரை வளர்க்குறங்களே, உங்க குதிரையின் காலில் அடிக்கப்பட்டிருந்தா லாடம் அடிக்கடி காணாம போகுதுதா? இந்தம்மாவோட வீடியோக்களை பார்த்துக்கோங்க என ட்ரோல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இவ்வளவு தெய்வீகமா குதிரை லாடத்தை பூஜையெல்லாம் பன்றதா சொல்ற வீடியோ பேக் கிரவுண்டுல “பூங்கதவே தாழ் திறவாய்”ன்னு காதல் பாட்டு ஓடுறமாதிரி வெச்சிருக்கீங்களே, இது நியாயமா? எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், அதே பெண்மணி சுரக்குடுவை செய்து அதையும் ஏதோ தெய்வீக பொருள்போல் விற்பனை செய்துவருகிறார். இதில் எதை எதையோ போட்டு கொடுப்பதாக சொல்கிறார். என்ன யூஸுன்னு தெரியல என்கிறார், நெட்டிசன்கள் இதோடு, இன்னொரு பெண்மணியோ குபேர மகாலட்சுமி எந்திரம் என்கிற பெயரில் விளம்பரம் செய்துவருகிறார். இதைவைத்து மகாராஷ்டிராவில் ஒரு சிறுவன்பயங்கரமான வித்தை காண்பிப்பதாகவும் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். அடுத்ததாக, “மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு..” மணி ப்ரோ விமர்சித்து வெளியிட்ட வீடியோதான் சென்சிட்டிவ்வானது, சீரியஸ்ஸானது. “சிக்கன், மட்டன், பீஃப் ஊறுகாய் போடுறாங்கன்னும் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ வெளியிட, மிரட்டும் தொனியில் அந்த பெண்ணின் ஆதரவாளர் ஒருவர் “வணக்கம்டா மாப்ள” என பதில் வீடியோ வெளியிட்டதோடு, அந்த வீடியோவை டெலிட் செய்ய மிரட்டியது குறித்து, பேசிய மணி ப்ரோவோ, ”நான் வெஜ் ஊறுகாய் விற்பது உடலுக்கு கேடுன்னு சொன்னேன். உங்கக்கா மட்டும் பிரியாணிக்கு முட்டை இல்லைன்னு ரிவ்யூ பண்ணுவாங்க. சைவ ஓட்டலில் போய் சாம்பார் சாதம் சரியில்லைன்னு சொல்வாங்க. நாங்க ரிவ்யூ பண்ணக்கூடாதா? என்று விளாசி உள்ளார் உங்க அக்கா ஒரு கமேண்ட் போட்டிருக்காங்க. அதுல என்ன சொல்றாங்கன்னா, FSSAI எனப்படும் Food Safety and Standards Authority of India சர்டிஃபிகேட் வெச்சிருக்கேன். ஜி.எஸ்.டியும் லேப் டெஸ்ட்டும் வந்தபிறகு நான் மக்கள்கிட்ட காண்பிக்கிறேன்னு சொல்றாங்க. அதாவது, உங்க அக்காக்கிட்ட லேப் டெஸ்ட் இல்ல. லேப் டெஸ்ட் இல்லாமலேயே வீட்டுல குண்டான் குண்டானா சிக்கன், மட்டன், பீஃப் ஊறுகாய் செஞ்சு டப்பால அடைச்சு எக்ஸ்போ எக்ஸ்போவா வியாபாரம் பன்றாங்க. இதுசம்பந்தமா நான் ஃபுட் டிபார்ட்மெண்டுக்கு கம்ப்ளைண்டை தட்டிவிடுறேன்” என விமர்சித்துள்ளார். அடுத்ததுதான் “மூதேவி மாயப்பொடி” என்கிற உலகமகா உருட்டு. ”இந்த பொடியை உங்க வீட்டுல புகையா போடும்போது, உங்க வீட்டுல உள்ள எல்லா கெட்ட சக்தியும் போயிடும். பண வரவு குறைவா இருக்கு, சோம்பேறித்தமா இருக்குன்னா, இந்த பொடிய புகையா போடலாம்” என கூறியதோடு எக்கச்சக்கமான பிரச்சனைகள் தீரும் என அள்ளி வீசுகிறார். விமர்சன வீடியோவால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணோ நெகட்டிவ் கமேண்ட் போட்டவர்கள் எல்லாம் நல்லா மாட்டுனீங்க என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதேபோல், அனிதா குப்புசாமி, நடிகை காதல் சரண்யா என பல பெண்கள், மக்களின் நம்பிக்கைகளை பணமாக்கும் விதமாக பல்வேறு வீடியோக்களை வெளியிடுவதாக விமர்சித்துள்ளார். மணி ப்ரோ என அழைக்கப்படும் இவர் வெளியிடும் விழிப்புணர்வு வீடியோக்கள் குறித்து, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் கேட்டபோது, “ஊறுகாயை பொறுத்தவரை சில மாதங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், பூண்டு மிளகு குழம்பை அப்படி பல மாதங்கள் வைத்து பயன்படுத்த முடியாது. இதை எல்லாம் விட உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய அபாயம் இருப்பது, நான் வெஜ் ஊறுகாய்களில்தான். எனவே, நான் வெஜ் ஊறுகாய் சாப்பிடும்போது மிகுந்த கவனம் தேவை” என எச்சரிக்கிறார். இந்தநிலையில்தான், அய்யா... ஃபுட் சேஃப்டி ஆப்பிசருகளா? ஊருக்குள்ள இருக்கீகளா? இல்ல... ஏதாவது வெளியூரு, டூருகீரு போயிட்டீங்களா? இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்கலாமே? என இன்ஸ்டா கிராமமே கேள்வி எழும்பி வருகிறது. -மனோ செளந்தர்
Back to Top News
Top
September 11, 2026 at 11:57 AM
இல்லத்தரசிகளின் Expo scam 6 மாசம்கூட கெடாத கொழம்பு...குதிரை லாடம் குபேர யோகம்; யார் இந்த Expose மணி Bro?
Polimer News