நாகர்கோவில் சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட மாற்றுத் திறனாளி சபரிவர்மனை, சிறையில் இருந்த 8 கைதிகள் மூன்று சிறை வார்டன்கள் முன்னிலையில் கைகளைக் கட்டி கொடூரமாகத் தாக்கியுள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சபரிவர்மன் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் வார்டன்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சபரிவர்மன், சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் குழந்தையைப் பார்க்க வெளியே விடும்படி கூறி சத்தம் போட்டதாகவும், இதையடுத்து வார்டன்கள் தூண்டுதலின் பேரில் சபரிவர்மனின் கை கால்களை லுங்கியால் கட்டி, 8 கைதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் அவர் இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறை வார்டன்களையும் கைதிகளையும் சிபிசிஐடி போலீசார் தங்கள் காவலில் எடுத்த விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.