திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் நடந்த அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். கூட்டத்தின் பங்கேற்றவர்களின் பெயரை குறிப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டர் ஒருவர் “ஐயா கருத்துகளை சொல்லுங்க” என்றதும்... டென்சன் ஆகி அவரை கடிந்து கொண்டார். 1957 ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரவர்த்தி திருமகள் படத்தில் இடம் பெற்ற பாடலில் நயவஞ்சகரின் நாக்கு என்று கருணாநிதியை அப்பவே எம்.ஜி.ஆர் சொன்னதாக கூறிவிட்டு, அப்ப.. கருணாநிதி வரலை,, காங்கிரச சொல்லி இருப்பாரு என்று சமாளித்தார். அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், என்பதற்கு பதிலாக மரகதம் சந்திர சேகர் என்று மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பெயரை தவறுதலாக குறிப்பிட்ட திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவிற்கு சென்றவர்களை கையில் கிடைத்ததை எடுத்து அடிக்கவேண்டும் என்றார். தவெக ஆட்சியில் பல கோடி குதிரை பேரம் நடப்பதாக கூறிக் கொண்டு இருந்த போது , தொண்டர் ஒருவர் செல்போனில் பேசியதால் ஆத்திரம் அடைந்த திண்டுக்கல் சீனிவாசன், யோவ், உனக்கு காதலி யாராவது இருக்காங்களா, ஓயாம செல்போனில் பேசிகிட்டே இருக்க என்று கடிந்து கொண்டதோடு, தான் என்ன பேசிக் கொண்டிருந்தேன் என்பதை மறந்து தவித்தார் சீனிவாசன். மீண்டும் அந்த தொண்டரின் செல்போன் ஒலித்ததால் டென்சனாகி, “யோவ் வெளிய போய்யா” என்று உரக்க கத்தினார் டென்சன் சீனிவாசன்..! எனது மகன் விஜய் கட்சிக்கு சென்றால், அதை தடுக்கவில்லை என்றால் நான் ஆம்பளையா? (முன்னாள் மேயர் மருதராஜ் குறித்து பேச்சு) எதற்கு வேஷ்டி, எதற்கு சட்டை விசி எறியுங்கள் என்ற தோடு அவர்களை தெய்வமே நீ தான் கேட்க வேண்டும் என்று சாபமிட்டார். நீட் தேர்வில் வெற்றி பெறாத அரசு பள்ளி மாணவர்களுக்கு எடப்பாடியார் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததாக தவறாக கூறிவிட்டு, அதனையும் தெரிஞ்சிக்கங்கப்பா என்று கெத்தாக கூறினார் திண்டுக்கல் சீனிவாசன்.