திண்டுக்கல்லில் காரின் மீது கவனக்குறைவாக வைக்கப்பட்ட நகைப்பெட்டி சாலையில் தவறி விழுந்த நிலையில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார் இரண்டே நாளில் மீட்டுள்ளனர். அருண்குமார் என்பவர் கடந்த 30-ஆம் தேதி தனது சகோதரியின் இல்ல நிகழ்வுக்குப் புறப்பட்டபோது, 50 சவரன் அடங்கிய நகைப் பெட்டியை கவனக்குறைவாக காரின் மேலே வைத்துவிட்டு மறதியில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் நகைப் பெட்டி விழுந்துள்ளது. பின்னர் திண்டுக்கல் காவல் நிலைய போலீஸார் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பால் வியாபாரியான குழந்தை ராஜ் என்னும் அவரை பிடித்து விசாரித்தபோது, 20 சவரனை அவர் வங்கியில் அடகு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மொத்த நகைகளையும் அவரிடம் இருந்து போலீசார் மீட்டு அருண்குமாரிடம் ஒப்படைத்தனர்.