கோவை மாநகராட்சி திட்டப் பணிகளில் 40 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாகக் கூறி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் பெண் கவுன்சிலரை திமுக பெண் கவுன்சிலர்கள் சமாதானம் செய்ய முயன்றபோது மாறிமாறி மல்லுக் கட்டியதால் பரபரப்பு நிலவியது. மேயர் மற்றும் ஆணையர் முன்னிலையில் 44ஆவது வார்டு காங்கிரஸ் பெண் கவுன்சிலரான காயத்ரி முழக்கம் எழுப்பியதால் திமுக கவுன்சிலர்கள் சமாதானம் செய்யச் சென்றனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி தனது சேலையை வரிந்து கட்டிக் கொண்டு திமுக கவுன்சிலர்களுடன் மல்லுக்கு நின்றார். பிரச்சனை முடிந்து வெளியில் வந்து பேசிய காயத்ரி, ஒத்தைக்கு ஒத்தை யார் வந்தாலும் சரி என திமுக கவுன்சிலர்களுக்கு அறைகூவல் விடுத்தார். நடந்து சென்றபடி செய்தியாளர்களிடம் காயத்ரி பேசிக் கொண்டிருந்த போது, அங்கு ஓடி வந்த திமுக பெண் கவுன்சிலர்கள், திமுக கூட்டணியில் இருந்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து விட்டு இப்போது இப்படி பேசுவதா? என கேள்வி எழுப்பினர். அப்போது, திமுக பெண் கவுன்சிலர்களின் தோளில் கை போட்ட படி, மு.க.ஸ்டாலினை காயத்ரி புகழ்ந்து பேசினார். இந்த நிலையில் ரகளையில் ஈடுபட்ட காயத்ரியை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.