திருப்பூர் சாமளாபுரத்தில் தனிநபருக்கு சாதகமாக சாலை அமைத்ததை தட்டிக்கேட்ட விசைத் தறி தொழிலாளர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி கருகம்பாளையம் பள்ளி அருகே விசைத்தறி தொழிலாளர் பழனிசாமி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கருகம்பாளையம் பகுதியில் தனி நபர்களுக்கு சாதகமாக பேரூராட்சி சார்பில் தார் சாலை போடும் பணி நடந்தது குறித்து விசைத்தறி தொழிலாளர் பழனிசாமி புகார் அளித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் திட்டமிட்டு அவர் மீது திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி கார் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி கனகராஜ், திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.