2027 உலகக் கோப்பை திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை? லார்ட்ஸ் போட்டியே கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் எனத் தகவல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, 2027 ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய தேர்வுக்குழு மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர், நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடருக்குப் பிறகு அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் திட்டத்தை ரோஹித் சர்மாவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஜூலை 19-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து 3-வது ஒருநாள் போட்டி, ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 2027 உலகக் கோப்பையை முன்னிட்டு இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு தொடர்ச்சியான வாய்ப்பு வழங்க தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் ரோஹித் சர்மாவை நீண்டகால திட்டத்தில் சேர்க்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பரவி வரும் தகவல்கள் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித்தின் திறமையில் அணிக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அவரது சமீபத்திய ஃபார்மை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை BCCI அல்லது ரோஹித் சர்மா தரப்பில் ஓய்வு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, ரோஹித் சர்மாவின் சர்வதேச எதிர்காலம் குறித்த இறுதி முடிவு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Back to Top News
Top
July 17, 2026 at 6:15 AM
2027 உலகக் கோப்பை திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை? லார்ட்ஸ் போட்டியே கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என தகவல்
Polimer News