TNPSC தொகுதி 2 மற்றும் 2A பணிகளுக்காக 5,000-க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 821 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, இளைஞர்களின் நலன் கருதி எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பட்டப்படிப்பு முடித்து 60 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சூழலில் சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு வெறும் 41 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது TNPSC வரலாற்றிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் 6,000-க்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், தற்போது 821 பணியிடங்களை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல எனவும் பாமக தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.