மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன்இக்பால். இவர், கடந்த 5 ஆண்டுகளாக குளத்திலேயே கழுத்தளவு நீரில் இருந்து வருகிறார். குளத்தில் இருந்து வெளியே வந்தால் சிறுவனின் உடல் முழுவதும் தாங்க முடியதாக எரிச்சல் ஏற்படுவதாகவும், அதனால் அங்கேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமானுஷியம் இருப்பதாக நம்பும் சிறுவன்..! சிறுவனை நீரிலிருந்து வெளியேறுமாறு சமாதானப்படுத்த உறவினர்களும் உள்ளூர் அதிகாரிகளும் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனக்கு ஆவி பிடித்துள்ளதாகவும், இதில் அமானுஷியம் இருப்பதாகவும் சிறுவன் நம்பி வருகிறான். குளத்திலேயே உணவு..! பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் தண்ணீரில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் வேதனையோடு தெரிவித்துள்ளனர். இக்பாலுக்கு தண்ணீரிலேயே உணவு, சிற்றுண்டிகள் மற்றும் பழங்களை குடும்பத்தினர் அளித்து வருகிறார்கள். நீண்ட நேரமாக தண்ணீரிலேயே இருப்பதால் அவருக்கு விடாப்பிடியான சளி மற்றும் இருமல் அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். ஊர் மக்களின் கூட்டு முயற்சி..! சிறுவனின் நிலையைக் கண்டு கவலையடைந்த பெற்றோர், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை என தெரிவித்தனர். தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்ல போதிய பணம் இல்லாததால் பெற்றோர் வேதனையில் உள்ளனர். சிறுவனின் குடும்பத்தினர் ஏழ்மையானவர்கள் என்பதால், கிராம மக்கள் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட நன்கொடைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோகத்தில் குடும்பத்தினர்..! சிறுவன் நீருக்குள்ளேயே இருப்பதால், தோலில் பிரச்சினையும், பூஞ்சை தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர்கள் கூறுகிறார்கள். வழக்கமாக இந்த வயது சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதும், நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதும் வழக்கம். ஆனால் இக்பால் மட்டும் குளத்திலேயே இருப்பது அப்பகுதியினர் மத்தியில் பெரும் வேதனை அளித்து வருகிறது.