சம்பா சாகுபடி கனவாகும் ஆபத்து உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.65 அடியாக குறைந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 80 கன அடி மட்டுமே தண்ணீர் வருவதால் நீர் மட்டம் குறைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இன்னொருபுறம் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர்வரத்து வினாடிக்கு 16,830 கன அடியாக குறைந்து விட்டதாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தவிர அந்த அணைகளுக்கு தண்ணீர் வரவோ,அங்கிருந்து தண்ணீர் திறந்து விடவோ வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், அதை நம்பியும் சாகுபடி செய்ய உழவர்கள் தயாராக இல்லை என்பதால் சம்பா சாகுபடி வழக்கமான அளவான 14 லட்சம் ஏக்கரில் இருந்து 5 முதல் 6 லட்சம் ஏக்கராக குறைந்து விடக் கூடும் என்று அஞ்சப்படுவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கச் செய்தல், சம்பா தொகுப்பாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி சம்பா சாகுபடியை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.